லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சேர்ந்த அதிகாரமிக்க தலைவரான ஷிவ்பால் யாதவ் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவை தலைவராக அறிவித்து புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.
சமீபத்தில்முடிந்த உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஓராண்டாக சமாஜ்வாடி கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. அதன் ஒரு பகுதியாக கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவராக முலாயம் சிங் யாத்விண்மகனும், அப்போதைய முதல்வருமான அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை செல்லாது என முலாயம் அறிவித்தார்.
பின்னர், கட்சி மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்று இரு தரப்பும் தேர்தல் ஆணையம் சென்றது. இந்த போட்டியில் அகிலேஷ் யாதவ் தலைமை வகிக்கும் குழு வெற்றி பெற்று கட்சியின் பெயர் மற்றும் சைக்கிள் ஆகிய இரண்டையும்கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து நடந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக உட்கட்சிப் பூசல் மீண்டும் தலைதூக்கியது. கட்சியின் கட்டுப்பாட்டை 3 மாதங்களுக்குள் முலாயம் சிங்கிடம் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்படைக்காவிட்டால், புதிய மதச்சார்பற்ற முன்னணி துவங்கப்படும் என்று அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவ் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சியை துவங்கப்போவதாக அறிவித்துள்ளார். புதிய கட்சி மதச்சார்பற்ற சமாஜ்வாடி மோர்ச்சா என அழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவ் இருப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.