ஃபரிதாபாத்: அரசுப் பள்ளிகளில் வழங்கும் சத்துணவின் தரம் குறித்து எழும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் அரியானாவில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இயங்கி வரும் ராஜ்கீயா மகளிர் உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில், குட்டிப்பாம்பு ஒன்று செத்துக் கிடந்ததை மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
சத்துணவில் குட்டிம்பாம்பு ஒன்று செத்துக் கிடப்பதைப் பார்த்ததும், உடனடியாக மற்ற மாணவிகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால், அதற்குள் பல மாணவிகள் தங்களது உணவில் பாதியை சாப்பிட்டுவிட்டனர்.
சத்துணவை சாப்பிட்ட சில மாணவிகள் இது பற்றி அறிந்ததும் வாந்தி எடுத்துவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததம், சத்துணவை பரிசோதித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சத்துணவில் குட்டிப்பாம்பு இருந்ததை உறுதி செய்து உடனடியாக மற்றப் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
பல சமயங்களில் பள்ளிக்கு வழங்கப்படும் சத்துணவில் மோசமான நாற்றம் அடிக்கும் என்பதை ஒப்புக் கொண்டுள்ள ஆசிரியர்கள், இந்த சம்பவம் மிக மோசமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர்.