

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா, 10ம் வகுப்பு பாடத்தில் எச்ஐவி நோய் பற்றி படிப்பதற்கு முன்பே, தனது தந்தைக்கு எச்ஐவி இருப்பதை அறிந்து கொண்டார்.
தந்தைக்கு எச்ஐவி நோய் இருக்கிறது என்பதைத் தவிர, அந்த நோய் பற்றி எதுவும் தெரியாது. 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தான் அந்த நோய் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டார்.
ரிக்க்ஷா ஓட்டுனரான தனது தந்தைக்கு எச்ஐவி நோய் பாதித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்த நிலையிலும், மனம் தளராமல் படித்து 10ம் வகுப்புத் தேர்வில் 408 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஸ்வேதா, தனது தந்தை இறந்த பிறகு, அவரது உடலைப் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. அந்த நோய் மகளுக்கும் பரவி விடுமோ என்ற பயத்தில், ஸ்வேதாவின் தாய், தந்தையிடம் இருந்து தள்ளியே வைத்திருந்தார் தனது மகளை. இந்த அனைத்து கசப்பான அனுபவங்களையும் தாண்டி, நன்றாக படித்து ஸ்வேதா நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
பெல்ஸ் சாலையில் உள்ள சர்வ சிக்ஷா அபியான் பயிற்சி மையத்தில் தங்கிப் படித்து வரும் ஸ்வேதா எதிர்காலக் கனவுகளோடு காத்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.