காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக பயன்படுத்தப்படும் 'பப்பு' (சிறுவர்) என்ற வார்த்தை பாஜக விளம்பரத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது அந்த விளம்பரத்தில் 'பப்பு' என்பதற்கு பதிலாக இளவரசர் என்று பொருள்படும் 'யுவராஜ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இத்தேர்தலின் வெற்றி - தோல்வியானது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதனால், பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு அங்கு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, அங்கு தேர்தல் விளம்பரத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்தப்படும் வாசகங்களை தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் ஊடகக் குழுவின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பாஜக சார்பிலான தேர்தல் விளம்பரம் தேர்தல் ஆணையத்தின் ஊடகக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, அந்த விளம்பரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையிலான 'பப்பு' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த விளம்பரத்துக்கு தேர்தல் ஆணைய ஊடகக் குழு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், பாஜக சார்பிலான அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட வார்த்தை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக 'யுவராஜ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப தேர்தல் ஆணைய ஊடகக் குழு தற்போது அனுமதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.