குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே குளிர்கால கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் பாஜக மீது குற்றஞ்சாட்டினர்.
குஜராத் தேர்தலையொட்டி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது:
குஜராத் தேர்தலை மனிதல் வைத்துதான் குளிர்கால கூட்டத் தொடரினை பாஜக வேண்டுமென்ற தள்ளி வைத்துவிட்டது. ஏனெனில் அது எப்போதும் போன்று சரியான நேரத்தில் நடந்தால் அதில் காங்கிரஸின் கேள்விகளுக்கு பாஜக-விடம் பதில் இல்லை.
பொதுவாக குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும். அதில், நாட்டின் அப்போதைய முக்கியப் பிரச்னைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
ஆனால், இவ்வாறு குளிர்கால கூட்டத்தொடரை நடத்தினால் அவர்களால் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டது தொடர்பான காங்கிரஸின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது.
இங்கு வளர்ச்சி குறித்து கூறுவது போன்று இது ஒன்றும் 'குஜராத் மாதிரி' அன்று இது நரேந்திர மோடியின் 'விளம்பர மாதிரி' அவ்வளவுதான் என்று சரமாரியாகச் சாடினார்.
அதுபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா, கட்சியின் கமிட்டி கூட்டத்தின் போது பேசியதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது. இதில், சுயநல காரணங்களுக்காக குளிர்கால கூட்டத் தொடரை தள்ளி வைத்ததன் மூலம் ஜனநாயகம் என்னும் கோயில் பூட்டப்பட்டுவிட்டது. இதனால் ஜனநாயகம் மற்றும் சமூகத்தின் மீதான தங்களது பொறுப்பில் இருந்து தப்பித்துவிடலாம் என்று பாஜக பகல்கனவு காண்பது முற்றிலும் தவறானது என்றார்.