சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.
தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் தினகரன் தரப்பினர் மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர்.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் மற்றும் நாகராஜன், விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், உதயகுமார், கோகுலகிருஷ்ணன், சத்யானந்த், செங்குட்டுவன் உள்ளிட்ட 7 எம்பிக்களுடன், டிடிவி தினகரன் இன்று முற்பகலில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் என 10 பேருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் உடனிருப்பர் என்று முன்னதாகக் கூறப்பட்டது.
சந்திப்பின் பின்னணி:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த மாதம் கடிதம் அளித்துள்ளனர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆளுநரை டிடிவி தினகரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் அறிவிப்பார் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.