பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் அந்த இருவேறு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னவென்று பாஜகவில் அங்கம் வகிக்கும் வர்த்தகர்களிடமே கூட அக்கட்சித் தலைமை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக செயற்குழுக் கூட்டம் தில்லியில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. அதில் முக்கிய அம்சமாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தை பாராட்டி சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சுட்டுரையில் (டுவிட்டர்) இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது;
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரி; அவசரகதியில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டியும் சரி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் எழுப்பியுள்ளன. அந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதகங்களும், பாதிப்புகளும் என்னவென்று பாஜகவைச் சேர்ந்த வணிகர்களைக் கூட அக்கட்சித் தலைமை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் அவர்
குறிப்பிட்டுள்ளார்.