தற்போதைய சூழலில் பயங்கரவாதம்தான் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அதனை வேரறுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் எனக் கூறியுள்ளார்.
இல்லையெனில், ஐ.நா. சபை முன்னெடுக்கும் எந்த முன்முயற்சிகளும் முழுமையடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வகை செய்து தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சுஷ்மா இவ்வாறு கருத்து வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் அணி சாரா நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். வெனிசுலா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸா தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சுஷ்மா பேசியதாவது:
ஐ.நா. சபையின் கடந்த கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகள் வலியுறுத்தின. அதே கருத்தைத்தான் நீண்ட காலமாக இந்தியாவும் முன்வைத்து வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவராமல் வேறு எந்த சீர்திருத்த நடவடிக்கையை ஐ.நா. முன்னெடுத்தாலும் அது முழுமையடையாது.
உலக அரங்கில் தற்போது பயங்கரவாதம்தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கனோர் அத்தகைய கொடுஞ்செயலுக்கு பலியாவதும், பலத்த காயமடைந்து முடங்கிப் போவதும் தொடர் கதையாக உள்ளது.
மேலும், அதுபோன்ற நடவடிக்கைகளால் உலக நாடுகள் வளர்ச்சி இலக்கை சென்றடைவதிலும் தடைகள் ஏற்படுகின்றன.
பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். உலகளாவிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குத் தேவையான சட்ட வழிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், சர்வதேச அளவில் ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று கடந்த 1996-ஆம் ஆண்டிலேயே இந்தியா வலியுறுத்தியது. 20 ஆண்டுகளைக் கடந்தும், அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள்தான் மேம்பட்டிருக்கிறதே தவிர, அத்தகைய மாநாடு நடைபெறவில்லை.
அதேவேளையில், பயங்கரவாதிகள் தொடர்ந்து தங்களது சதித் திட்டங்களை உலகமெங்கும் அரங்கேற்றி அப்பாவி மக்களின் உயிரைப் பறித்து வருகின்றனர்.
சர்வதேச விதிகளிலும், நடைமுறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தால்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










