மத்திய அரசுக்கு எதிராக, புதுவை அரசுக் கொறடா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 6 வாரக் கெடு முடியும் நாளில் தீர்ப்பில் இடம் பெற்றிருந்த "ஸ்கீம்' (திட்டம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு வருகிற 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதேபோல, புதுவை அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க முடிவு செய்தது. அதற்கான கோப்பு தயாரித்து ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி தரவில்லை.
இதனால், புதுவை அரசுக் கொறடா அனந்தராமன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி அரசு கொறடா அனந்தராமன் தில்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடுத்தார்.
இம்மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசின் மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து 9ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








