தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் மூலம் பாஜக நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இதனால், அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருந்ததாக கருத்தப்பட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டதை அடுத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. குறிப்பாக, இந்த வரைவுப் பதிவேட்டால் மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடினார்.
இதையடுத்து,மம்தா பானர்ஜி நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக நெருப்போடு விளையாடுகிறது என்றார்.
அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
"அவர்கள் (அசாம் வரைவுப் பதிவேட்டில் விடுபட்டவர்கள்) வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நமது குடும்பத்தினர். அவர்களிடம் வெளியேறுமாறு சொல்லக்கூடாது.
பாஜக தற்போது செய்து வருவது ரத்தக்களரியை உண்டாக்கும். அவர்கள் நெருப்போடு விளையாடுகிறார்கள்.
நான் யாரும் இல்லை, வெறும் சாதரணமான பணியாளர் தான். நான் சாதரணமானவராகவே தொடர விரும்புகிறேன். எனக்கு இந்த பாஜக அரசு வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் அதிகபட்ச அட்டூழியங்களையும், அரசியல் பழிதீர்க்கும் செயல்களையும் செய்து வருகின்றனர்.
அதனால், நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்று சேர முடிவெடுத்தோம். தேச நலனை கருத்தில் கொண்டு, நாங்கள் பிரதமர் வேட்பாளர் குறித்து சிந்திக்காமல் இணைந்து செயல்பட உள்ளோம்.(பிரதமர் வேட்பாளர் குறித்து)
மேற்கு வங்கம் அனைவருக்குமானது. அது அனைவரையும் வரவேற்கும்.(அமித்ஷா வருகை குறித்து)
நான் நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை இருந்திருக்கிறேன். அனைவருடனும் நல்லுறவை வைத்து வருகிறேன். மேலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.(அரசியல் தலைவர்கள் சந்திப்பு குறித்து)" என்றார்.
இதைத்தொடர்ந்து அவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியையும் மாலை சந்திக்கவுள்ளார்.