சிறந்த கண்டுபிடிப்புகள் இளைஞர்களால் ஏற்படுகிறது: மும்பை ஐஐடி-யில் பிரதமர் மோடி உரை

மும்பை ஐஐடி-யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.
சிறந்த கண்டுபிடிப்புகள் இளைஞர்களால் ஏற்படுகிறது: மும்பை ஐஐடி-யில் பிரதமர் மோடி உரை
Updated on
1 min read

மும்பை ஐஐடி-யின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 56-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் எரிசக்தி அறிவியல் துறையின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பது உங்கள் முகத்தில் வெளிப்படும் நம்பிக்கையில் தெரிகிறது. மும்பை ஐஐடி-க்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடுகிறேன். ஐஐடி மாணவர்களால் தான் இந்திய ஐடி துறை வளர்ச்சி அடைகிறது. இந்திய தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை நீங்கள்தான் படிப்படியாக கட்டமைத்து வருகிறீர்கள்.

கண்டுபிடிப்பு தான் 21-ஆம் நூற்றாண்டின் மந்திரச் சொல்லாக உள்ளது. அது இல்லாத சமூகம் வளர்ச்சியில் தேக்கமடைந்துவிடும். இளம் தொழில்முனைவோரின் களமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. எனவே இங்கு கண்டுபிடிப்புகளுக்கு இருக்கும் தாக்கம் தெரிகிறது. இந்தியாவை சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான இடமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி, மனிதநேயம், இயற்கை மேம்பாடு, விவசாயம், நீர் மேலாண்மை, எரிசக்தி, கழிவு மறுசுழற்சி மேலாண்மை, ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம் ஆகியவை மேம்படும் வகையிலான தலைசிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.  

ஐஐடி மற்றும் ஐஐடி மாணவர்களால் இந்தியா பெருமை கொள்கிறது. ஐஐடி-க்களின் வெற்றிதான் நாடு முழுவதும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் உருவாக காரணமாக அமைந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவிலான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க முடிகிறது. 

நம்முடைய சிறந்த கல்வித் திட்டம் தொடர்பான முழுப் பயன்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். இங்கு இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் பின்புலன்கள் ஒன்றுகூடுவதன் மூலம் ஒருவருடைய அறிவு மேம்படுகிறது. பலவற்றை எளிதில் கற்க முடிகிறது.

இந்திய ஆய்வுக்கூடங்களில் இந்திய தொழில்நுட்ப மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகள் வெளிவர வேண்டும். இவை அனைத்தும் எந்த அரசு அல்லது தனியார் கட்டடங்களில் இருந்து வருவதில்லை. சிறந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் இதுபோன்ற கல்விக் கூடங்களில் இருந்து உங்களைப் போன்ற திறமையான இளைஞர்களின்  மனங்களில் இருந்து வெளிப்படுகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com