வாஜ்பாயின் மறைவால் இன்றைய தினம் எங்களுக்கு துக்க தினம் - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல்

வாஜ்பாயின் மறைவால் இன்றைய தினம் எங்களுக்கு துக்க தினம் - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல்
Published on
Updated on
1 min read

வாஜ்பாயின் மறைவால் வங்கதேச மக்களுக்கு இன்றைய தினம் துக்க தினம் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவருக்கு தலைவர்கள் இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். 

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வாஜ்பாய் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, 

"இந்தியாவின் சிறந்த மகன்களுள் ஒருவரான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. சிறந்த அரசாங்கத்துக்காகவும், இந்தியாவின் சாதாரண மக்களின் பிரச்னைகள் சுட்டிக்காட்டியதற்காகவும், பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவும் அவர் நினைவு கொள்ளப்படுவார். 

நாட்டு மக்களின் நலனுக்காக அவர் அயராது உழைத்தது வருங்கால தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.    

வாஜ்பாய் எங்களுடைய சிறந்த நண்பர். வங்கதேசத்தில் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். 1971 வங்கதேச விடுதலை போரில், அவர் ஆற்றிய சிறந்த பங்குக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவருக்கு வங்கதேச விடுதலைப் போர் விருது வழங்கப்பட்டது.

வங்கதேசத்தில் அனைவருக்கும் இன்று மிகவும் துக்கமான தினம். வங்கதேச அரசு சார்பாகவும், வங்கதேச மக்கள் சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என் சார்பாகவும் இந்திய அரசு, மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com