பயணத்தைத் தவிர்க்குமாறு ஜோதிடர் அறிவுரை: என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணாவை விடாமல் துரத்திய விதி

அக்டோபர் மாதம் வரை தொலைதூரப் பயணத்தைத் தவிர்க்குமாறு ஜோதிடர் அறிவுறுத்தியும், என்டிஆர்-ன் மகன் ஹரிகிருஷ்ணா விதிவசத்தால் சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார்.
பயணத்தைத் தவிர்க்குமாறு ஜோதிடர் அறிவுரை: என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணாவை விடாமல் துரத்திய விதி
Updated on
2 min read


ஹைதராபாத்: அக்டோபர் மாதம் வரை தொலைதூரப் பயணத்தைத் தவிர்க்குமாறு ஜோதிடர் அறிவுறுத்தியும், என்டிஆர்-ன் மகன் ஹரிகிருஷ்ணா விதிவசத்தால் சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என். டி. ராமாராவின் மகனும், நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி. ஆரின் தந்தையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும் ஆவார்.

ஹரிகிருஷ்ணா, தெலங்கானாவில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், நல்கொண்டா நெடுஞ்சாலையில் அவரது கார் சாலையில் எதிர்ப்புறத்தில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஹரி கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இந்த விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஹோட்டலில் இருந்து கிளம்புவதற்கு முன்பு ஹரிகிருஷ்ணா ஹோட்டல் ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, வரும் அக்டோபர் மாதம் வரை தனது குடும்ப ஜோதிடர் தன்னை தொலைதூரப் பயணம் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்ததாகவும், ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தானே காரை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவருக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுநரை ஹோட்டல் நிர்வாகம் வரவழைத்தும் கூட, அவர் கையில் பணத்தைக் கொடுத்த ஹரிகிருஷ்ணா, வாகனம் ஓட்ட வர வேண்டாம், ஓய்வு எடுத்துக் கொள் என்று கூறிவிட்டதையும் அதிர்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

எங்கள் ஹோட்டலுக்கு எப்போது வந்தாலும் அவர் 1001 அறையில்தான் தங்குவார். புதன்கிழமை அதிகாலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சில மணி நேரங்களில் விபத்து பற்றி செய்தி அறிந்து நாங்கள் அதிர்ந்து போனோம் என்று தெரிவித்தனர்.

விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கார் ஓட்டும் போது, வளைவு இருந்ததை கவனிக்காமல் தண்ணீர் கேட்டு ஹரிகிருஷ்ணா திரும்பியுள்ளார். வளைவில் மோதுவதை தடுக்கும் நோக்கில் காரை திருப்பியுள்ளார். எனினும் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்ப்புறம் இருந்த தடுப்பில் மோதியது. அந்த வேகத்தில், காரின் கதவு திறந்ததால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டார். அதனால் தலையில் பலமாக அடிபட்டது. அவர் "சீட் பெல்ட்' அணிந்து காரை ஓட்டியிருந்தால், உயிர் தப்பியிருக்கலாம். அவருடன் பயணித்த மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். சாலையின் கட்டுமானத்திலும் தவறு இருந்தது தெரிய வந்துள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com