ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வை (சிவில் சர்வீஸ்) எழுதுவதற்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை மத்தியப் பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மறுத்தார்.
குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை 32-இல் இருந்து 27 ஆகக் குறைக்க நீதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
புதிய இந்தியாவுக்கான உத்திகள் -75 தலைப்பில் கடந்த நவம்பர் இறுதியில் மத்திய அரசுக்கான பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நீதி ஆயோக் வெளியிட்டது. வரும் 2022-23ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக குடிமைப் பணிகள் தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்ச வரம்பை 32-இல் இருந்து 27 ஆகக் குறைக்கவும், ஆட்சிப் பணியில் பிரிவுகள் அடிப்படையில் தரவரிசை வழங்குவதற்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் பணியை ஒதுக்கீடு செய்யலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், குடிமைப் பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான வயது உச்ச வரம்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. அதுபோன்ற முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில், குடிமைப் பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பான அனைத்துச் செய்திகள், ஊகங்களை ஒதுக்கிட வேண்டும் என்றார்.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச வயது குறைக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. அரசின் யோசனையில் அதுபோன்ற முன்மொழிவு ஏதும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









