
கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் 19-வது ’விஜய் திவாஸ்’ நினைவு தினத்தில் கார்கில் திராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினரும், ராணுவ அதிகாரிகள், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதேபோன்று மாநிலங்களவையிலும் கார்கில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறுகையில்,
"நமது உயிர்களை காக்க மோசமான மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட நமது வீரர்களுக்கு அவை சார்பாகவும், எனது சார்பாகவும் அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்துக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நமது மரியாதையை செலுத்துவோம்" என்றார்.
முன்னதாக, தில்லியில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் விமானத் தளபதி மார்சல் பீரண்டர் சிங் தானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போரில் இந்திய தரப்பில் 527 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 357 முதல் 453 வரையிலும் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.