ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றினைச் சேர்ந்த 5 பெண்கள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நிறுவனமானது மனித கடத்தல் மற்றும் பழங்குடியினர் இடம் பெயர்தல் குறித்த பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி குந்தி மாவட்டம் அர்கி நகரில் செவ்வாய்க்கிழமை மாலை இவர்களது பிரசாரம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் ஒன்று துப்பாக்கியை காட்டி, அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களை மிரட்டி கடத்திச் சென்று உள்ளனர். அத்துடன் அவர்களது ஆண் ஊழியர்களையும் அவர்கள் கடத்திச் சென்றனர்
அவர்களை பத்தால்கடிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆண் ஊழியர்களை கடுமையாகத் தாக்கி, அவர்களது சிறுநீரை அவர்களே அருந்தும்படிச் செய்தனர். பின்னர் அவர்களை காருக்குள் அடைத்து போட்டு விட்டு, 5 பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வதற்கு கிராமத்திற்குள் வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
பின்னர் அவர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், சந்தேகத்திற்கு இடமான 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.