
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியது.
இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தள்ளது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்துக்கு, நீதிமன்றக் காவல் நிறைவடைய ஒருநாள் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.