மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ரஃபேல் விவரங்களை வெளியிட முடியாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

தேசத்தின் நலன் கருதி ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதல் விலையை பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 7:37 pm

தேசத்தின் நலன் கருதி ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதல் விலையை பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீது ஆதாரப்பூர்வமாக எந்தக் குற்றச்சாட்டும் வைக்க முடியாததால், பொய்ப் பிரசாரங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. இந்நிலையில் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் இது எதிரொலித்தது. ரஃபேல் சர்ச்சையை மத்திய அரசுக்கு எதிரான பிரசார உத்தியாகவே அப்போது காங்கிரஸ் கட்சி கையாண்டது.
இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
மத்திய அரசின் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டுமே என்பதற்காக ராகுல் காந்தி பல வழிகளில் முயற்சிக்கிறார். ஆனால், எதுவுமே கைகொடுக்கவில்லை. அதனால்தான் தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தி அவர் கேள்வி எழுப்பி வருகிறார். போர் விமானங்கள் கொள்முதல் செய்வது என்பது இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்படும் ராஜீயரீதியிலான நடவடிக்கை. அதில் உள்ள பல விஷயங்களை வெளிப்படையாகக் கூறுவது என்பது இயலாத காரியம். அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் அது தேசத்தின் பாதுகாப்புக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ராகுல் காந்தியை திருப்திபடுத்துவதற்காக நாட்டின் நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றார் அவர்.
கடந்த சில மாதங்களுக்கும் முன்பும் இதே கருத்தை நிர்மலா சீதாராமன் தெரிவித்ததும், காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியதும் நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.