லக்னௌ: அலிகார் பல்கலையில் உள்ள முகமது அலி ஜின்னாவின் புகைப்படம்48 மணி நேரத்தில் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் யுவ வாஹினி அமைப்பு பல்கலைகழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவ யூனியன் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்வமைப்பை சேர்ந்த அமீர் ரஷீத் என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார் . ஆனால் அந்த கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து விட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அலிகார் தொகுதி எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் அந்த அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனிநாடு கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னரே ஜின்னா சார்ந்த முஸ்லீம் லீக் கட்சி முன்வைப்பதற்கு முன்னதாகவே அவர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செவ்வாய் அன்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
1920-இல் ஜின்னா பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். ஜின்னா 1938-ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். பல்கலைக்கு கொடை அளித்தவரும் கூட.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அலிகார் பல்கலையில் உள்ள முகமது அலி ஜின்னாவின் புகைப்படம்48 மணி நேரத்தில் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் யுவ வாஹினி அமைப்பு பல்கலைகழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னராக இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத்தின் யுவ வாஹினி அமைப்பானது ஜின்னாவின் புகைப்படத்தை 48 மணி நேரத்தில் ஜின்னாவின் புகைப்படம் பல்கலைக்கழகத்தில் அகற்றப்படவில்லை என்றால் நாங்கள், வலுக்கட்டாயமாக அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என யுவ வாஹினி அமைப்பின் துணை தலைவர் ஆதித்யா பண்டிட் தெரிவித்துள்ளார்.