அவுரத்(கர்நாடகா): நான் பிரதமர் மோடியை இதுவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார்.
அப்பொழுது நான் பிரதமர் மோடியை இதுவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பிரதமர் தற்பொழுது ராகுல் காந்தியினை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் எங்கு பிரதமர் மோடி பேசினாலும் சரி, என்னை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் நான் பிரதமர் மோடியை இதுவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை. தான் இந்த நாட்டுக்கு பிரதமர்; பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்பதை மோடி முதலில் உணர வேண்டும்.
அவர் பேசும் பொழுது நாடு தற்பொழுது எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஊழலை ஒழித்தல் உள்ளிட்டவை குறித்த தன்னுடைய செயல் திட்டங்களைப் பற்றிப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபரை தாக்குவதில் நேரம் செலவிடக் கூடாது.
கர்நாடகாவில் விவசாயிகள் பஞ்சத்தில் வாடிய பொழுதும் சரி, அவர்களுக்கான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு நான் கோரிக்கை வைத்த போதும் சரி, பிரதமர் மோடி கண்டு கொள்ளவே இல்லை.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.