உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்கம் தீர்மான நோட்டீûஸ, காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அண்மையில் அளித்தன. ஆனால், அந்த நோட்டீûஸ வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்ட திவ்யா ஸ்பந்தனா, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் ஒதுக்குவதில் அவர் தீய நோக்கத்துடன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அவரது செயல்பாட்டால் உச்ச நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் திவ்யா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதியையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி, அனில் கபோத்ரா என்ற முன்னாள் ராணுவ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை ஒப்புக் கொண்டது.
எனினும், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், வழக்கமான கால அடிப்படையில் மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.