ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல்வேறு வட மாநிலங்களில் ஏடிஎம்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவியது. மேலும், 2000 ரூபாய் நோட்டின் புழக்கமும் பெருமளவில் குறைந்தது.
மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதைக் குறைத்ததும், வங்கிகளிடம் இருந்து மக்கள் கையில் செல்லும் 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு அதிக அளவில் திரும்பி வராமல் இருப்பதுமே இந்தத் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கருப்புப் பண ஒழிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெறலாம் அல்லது செல்லாது என்று அறிவிக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய சிவ பிரதாப் சுக்லா கூறியதாவது:
இப்போதைய சூழ்நிலையில் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இப்போது, ஏடிஎம்களில் எவ்வித பணத்தட்டுப்பாடும் இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையை மத்திய அரசு முழுமையாக சீராக்கியுள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.