வறட்சி, வெள்ளம் உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,161 கோடியை அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,161 கோடியை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, வறட்சிக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.526.14 கோடியும், மழை-வெள்ளத்துக்காக அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரூ.480.87 கோடியும், வெள்ளம், நிலச்சரிவுக்காக ஹிமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 84.60 கோடியும், சிக்கிமுக்கு ரூ.67.40 கோடியும் பேரிடர் நிவாரண நிதி அளிக்கப்படுகிறது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுக்கு ரூ.2.16 கோடி பேரிடர் நிதியாக வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.