கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 2 தொகுதியை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வாக்குகள் எண்ணும் பணி மே 15-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது.
அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பெங்களூருவில் 18 ஆயிரம் போலீசார் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, வீட்டின் அருகில் உள்ள கோயில் ஒன்றில் சிறப்பு பூஜை நடத்தினார்.
பதாமி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள பி.ஸ்ரீராமுலு, பெல்லாரியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு வருகிறார்.
மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, நாகமங்கலாவில் உள்ள அதிசுந்சநகரி மஹசமஸ்தான மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார். இவர், ராமநகரா மற்றும் சென்னப்பட்டனா ஆகிய இரு தொகுதிகளில் இருந்து போட்டியிடுகிறார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர்.