கர்நாடக அமைச்சரவையில் காங்கிரஸ்-மஜத இடையே தீர்வு
கர்நாடக அமைச்சரவை அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மஜத இடையே தீர்வு காணப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என மஜத தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி தலைமையிலான அரசு பதவியேற்றது. இதையடுத்து மஜத தலைவர் குமாரசாமி, கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும் அமைச்சரவை தொடர்பாக இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், அஷோக் கேலோட் மற்றும் கே.சி.வேணுகோபால் அடங்கிய குழு மஜத கட்சியுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வந்தது.
இதில் இரு கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச பொதுக் கொள்கை முடிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 முறை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள், லண்டனில் சோனியா மருத்துவ பரிசோதனை தொடர்பாக உடன் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எனவே, மஜத கட்சிக்கு நிதித்துறை, மருத்துவக் கல்வித்துறை, விவசாயத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒதுக்கப்படவுள்ளது. உள்துறை, உயர்கல்வித்தறை, வீட்டு வசதி மற்றும் பெங்களூரு முன்னேற்றத்துறை, உயர் கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவை காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.