புது தில்லி: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களைச் சேர்க்க கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த பதிவேட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக அசாம் மாநில அரசு நீதிமன்றத்தில் கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்கள் தங்கள் பெயர்களை சேர்த்துகொள்ள 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கினர்.
இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கு வியாழன் அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்க்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பி, பிப்ரவரி 1-ம் தேதிக்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.