சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவது பாஜகவுக்கே சாதகம் என்று அந்த மாநில முதல்வர் ரமண் சிங் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் சட்டப் பேரவைத் தேர்தல், வரும் 12, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவற்கு காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. அதே சமயம், நான்காவது முறையாக முதல்வர் பதவியைத் தக்கவைப்பதற்கு ரமண் சிங் முயற்சி செய்து வருகிறார். இதனிடையே, அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளன. இதனால், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து முதல்வர் ரமண் சிங், பிடிஐ செய்தியாளருக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக உதயமான பிறகு, மாநிலத்தின் முதல் முதல்வராக கடந்த 2000 முதல் 2003 வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அவருக்கு மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கு உள்ளது. அவர், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. அவர் தேர்தலில் போட்டியிடுவதால், மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அஜித் ஜோகியால், பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு ஏற்படும். எனினும், பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பு அதிகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவது பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









