புது தில்லி: மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவலை சந்திக்க துப்பாக்கிக் குண்டுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெறும் ஜனதா தர்பார் என்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 39 வயது நபரை காவல்துறையினர் சோதித்தபோது, அவரது பர்ஸில் துப்பாக்கிக் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கரோல் பாக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றை நிர்வகித்து வருபவரும், சீலாம்பூரில் வசித்து வருபவருமான மொஹம்மது இம்ரான் என்பவர் ஜனதா தர்பாரில் பங்கேற்க வந்த போது கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம், அரவிந்த் கேஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி தூவப்பட்ட நிலையில், தற்போது துப்பாக்கிக் குண்டுடன் ஒருவர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.