நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு
புது தில்லி: அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
2018-2019-ம் ஆண்டின் அக்டோபர் 1ந்தேதி முதல் டிசம்பர் 31ந்தேதி வரையிலான நான்காவது காலாண்டிற்கான பொது சேமநல நிதி (வருங்கால வைப்பு நிதி) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக இருக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதமானது மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் வருங்கால வைப்பு நிதிகளுக்கு அமலாகும்.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்த வட்டி விகிதமானது 7.6 ஆக இருந்தது.
வங்கிகளில் பணம் வைப்புக்கான வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் அதற்கேற்ப நடப்புக் காலாண்டிற்கு இந்த உயர்வு அறிவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.