/

மோடியின் தலைமையில் அரசியல் பழி வாங்கும் கருவியாக மாறி விட்ட சிபிஐ :  ராகுல் காந்தி  

மோடியின் தலைமையில் அரசியல் பழி வாங்கும் கருவியாக சிபிஐ மாறி விட்டதாக காங்கிரஸ் தலைவர்   ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:07 pm

IANS

புது தில்லி: மோடியின் தலைமையில் அரசியல் பழி வாங்கும் கருவியாக சிபிஐ மாறி விட்டதாக காங்கிரஸ் தலைவர்   ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி உள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரணை நடத்தும் குழுவின் தலைவரும் , சிபிஐ சிறப்பு இயக்குநருமான ராகேஷ் அஸ்தானா, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இவ்விவகாரத்தில் இடைத்தரகர் மனோஜ் குமார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மோடியின் தலைமையில் அரசியல் பழி வாங்கும் கருவியாக சிபிஐ மாறி விட்டதாக காங்கிரஸ் தலைவர்   ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், கோத்ரா சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியாக இருந்தவரும், சிபிஐயின் இரண்டாவது இடத்திற்கு உள்ளே கொண்டு வரப்பட்டவருமான அஸ்தானா மீது தற்போது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.     

பிரதமர் மோடியின் தலைமையில் அரசியல் பழி வாங்கும் கருவியாக சிபிஐ மாறி விட்டது. உள்முரண்களுக்குள் சிக்கி இருக்கும் சிபிஐ தற்போது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.