
புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) நியமித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நீதித்துறையின் மரபுப்படி தற்போதைய தலைமை நீதிபதி தனக்கு அடுத்து பதவிக்கு வருபவரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அவருக்கு அனுப்பியது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை இன்று நியமித்தார். உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
1954 ஆம் ஆண்டு பிறந்த கோகாய் 28.02.2001 அன்று கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 23.04.2012 ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் பகிரங்கமாக போர்க் கொடி தூக்கிய 4 நீதிபதிகளில், ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.