புது தில்லி: போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விடுத்து மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள லட்டினி ஆற்றில் திடீரென வெள்ளப் பேருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த டிசம்பர் 13-ந்தேதி அங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் 15 சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புக்குத் தேவையான உயர் ரக உபகரணங்கள் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விடுத்து மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வெள்ளம் புகுந்த நிலக்கரி சுரங்கத்தில் இரண்டு வாரங்களாக 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அதேசமயம் பிரதமர் போகிபீல் பாலம் மீது கேமிராக்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.தொழிலாளர்களை மீட்க தேவையான உயர் அழுத்த பம்புகளை ஏற்பாடு செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. தயவு செய்து சுரங்கத் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் பிரதமரே.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.