இந்திய தேர்தல் ஆணையத்தை சிறை வைப்பேன் என்று பாரிபா பகுஜன் மகாசங்க கட்சித் தலைவரும், அம்பேத்கர் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹராஷ்டிர மாநிலம் யவத்மல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியதாவது:
ஜனநாயக முறையில், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புல்வாமா தாக்குதல் குறித்து பேச சுதந்திரம் உள்ளபோதும், அதுகுறித்து பேசக்கூடாது என்று உத்தரவுகள் வருகின்றன. எங்கள் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சும்மா விட மாட்டோம். இந்திய தேர்தல் ஆணையத்தை நிச்சயமாக இரண்டு நாட்களுக்கு சிறை வைப்போம்.
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பாஜக-வுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
பிரகாஷ் அம்பேத்கர், மஹாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூர் மற்றும் அகோலா ஆகிய இரு தொகுதிகளிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.