

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பேருந்து நடத்துநரிடம் ஒரு ரூபாய் பாக்கியை வாங்காமல் இறங்க முடியாத மனநிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களால், கேட்பாரற்றுக் கிடந்த பையில் ரூ.3.48 கோடி இருந்தது என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வேட்டவலம் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு அரசுப் பேருந்தில் இருந்த பையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணத்தை ஸ்ரீகாகுளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நேரம் என்பதால் கார் மற்றும் பிற வாகனங்களை விட பாதுகாப்பானது என்று கருதி, கோடிகள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றன.
திருவண்ணாமலையிலிருந்து தருமபுரி நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து புறப்பட்டது. நாயக்கன்பட்டி கூட்டுச் சாலையில் சென்றபோது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் பேருந்தில் சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தின் இருக்கை அடியில் 7 பைகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, ரூ.3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 110-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பேருந்தில் இருந்த, திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த நடத்துநர் செல்வராஜிடம் (54) அதிகாரிகள் விசாரித்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணப்பையில் ரமேஷ் என்பவரின் வங்கிக் கணக்குப் புத்தகம் இருந்ததாம். விசாரணையில், ரமேஷ் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரமேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.