

விஜயவாடா: ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 4 நாட்களுக்குப் பிறகு, வாக்குப்பதிவு நடைபெற்ற அரசுப் பள்ளி ஒன்றில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அத்மகுர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், ஏராளமான வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து ஆசிரியர்களுக்குத் தெரிவித்தனர். இந்த விஷயம் ஊடகங்களுக்குத் தெரியவர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், அவை வெறும் டம்மி ஸ்லிப்புகள் என்றும், வாக்குப் பதிவு இயந்திரத்துடன், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைத்து சோதித்துப் பார்க்கும் போது வரும் ஸ்லிப்புகள் என்றும் விளக்கம் அளித்தனர்.
அதே சமயம், அவை உடனடியாக தேர்தல் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் கவனக்குறைவினால் அவை அப்படியே போடப்பட்டதே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.