

கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் பயணமாக அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் திங்கள்கிழமை (ஏப்.29) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
உறுப்பு நாடுகள் இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தால் எழும் பிரச்னைகள் மற்றும் அவற்றை முற்றிலும் ஒடுக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா முக்கிய நாடாகும். ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வீய் ஃபெங்கேவை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா - சீனா இடையிலான இருநாடுகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.