ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார்.
இந்நிலையில், 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவு என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.