ஜம்மு காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி வகுக்கும் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
இதைப் பாராட்டும் வகையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து டிவீட் செய்துள்ளார். இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது,
"நாம் ஒற்றுமையாக இருந்து, 130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவோம். ஜம்மு காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் அமோக ஆதரவுடன் நிறைவேறியிருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும்.
பல வருடங்களாக தங்களது சொந்த நலனுக்காக மக்களுக்கான அதிகாரம் குறித்து கவலை கொள்ளாமல், சிலர் உணர்வு ரீதியான மிரட்டலில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த பிடியில் இருந்து காஷ்மீர் தற்போது விடுபட்டுவிட்டது. அம்மாநிலத்துக்கு புதிய விடியல் காத்திருக்கிறது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர, சகோதரிகளின் தைரியம் மற்றும் மீண்டு எழும் திறனுக்கு தலை வணங்குகிறேன்.
இதுபோன்ற நடவடிக்கைகள், காஷ்மீர் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கும். உட்கட்டமைப்பு வளர்ச்சியடையும்" என்றார்.