நிர்வாகிகள் இனிமேல் காஷ்மீர் மாநிலத்தின் அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கதௌலி பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-படி வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கதௌலி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது,
"மோடி நமது கனவை நிறைவேற்றியுள்ளார். ஒட்டுமொத்த நாடே தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு உதவுமாறு ஹகிம்மை (காஷ்மீர் பாஜக தலைவர்) தொடர்பு கொண்டேன். ஆவலோடு காத்திருக்கும் நிர்வாகிகள் அனைவரும் இனிமேல் காஷ்மீருக்கச் சென்று, அங்குள்ள அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். எந்தப் பிரச்னையும் கிடையாது.
பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், ஜம்மு காஷ்மீர் பெண்கள் மாநிலத்தின் நிரந்தர குடியுரிமையை இழக்க நேரிடும் என்பது கொடுமையானது" என்றார்.