

ஸ்ரீநகர்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடுமையான கட்டுப்பாடுகளிடையே ஸ்ரீநகரில் தங்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏவை, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி வியாழனன்று சந்தித்துப் பேசினார்.
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தாரிகாமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் யெச்சூரி தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வானது,உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ முகமது யூசுஃப் தாரிகாமியை சந்திப்பதற்காக அங்கு செல்ல, அக்கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்து புதனன்று உத்தரவிட்டது.
அதன்படி வியாழன் காலை ஸ்ரீநகர் சென்ற அவர் விமான நிலையத்திலிருந்து 10 கார்கள் அடங்கிய கான்வாயுடன், குப்கர் சாலையில் அமைந்துள்ள தாரிகாமி இல்லத்தை நண்பகல் வாக்கில் சென்றடைந்தார். அந்த வீட்டிற்கு அருகே ஊடகத்தினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்கத்து. சிலமணி நேரங்கள் அந்த இல்லத்தில் யெச்சூரி தானாகி இருந்தார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டு கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்ட பின்னர், அங்கு போயிருக்கும் முதல் எதிர்கட்சித் தலைவர் யெச்சூரி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஸ்ரீநகருக்குச் செல்ல அவர் முயற்சித்த போது, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.