
பெங்களூரு: நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறக் காரணமே ராகுல் காந்திதான் என்று முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 46 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். பின்னர் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் உண்டான மோதல் காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறக் காரணமே ராகுல் காந்திதான் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மடூர் கிருஷ்ணா பகுதியில் சனிக்கிழமையன்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். அந்த சமயத்தில் ஆட்சியிலும், கட்சியிலும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவரது தலையீடு இருந்தது.
அப்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை.ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும், அவருக்குத் தெரியாமல், அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பல முக்கிய முடிவுகளை ராகுல் காந்தி தன்னிச்சையாக எடுத்தார்.
தனது அமைச்சரவையையும், அரசையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக மன்மோகன் சிங் இருந்த நிலையில், ராகுல் காந்தி அரசுக்கு இணையாகத் ஒரு தனி அமைச்சரவையை நடத்தி வந்தார்.
நான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்ற ராகுல் காந்தியின் ரகசிய உத்தரவின் பேரில், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.
தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது''.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.