பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வந்த அகதிகள் 1,986 பேருக்கு, கடந்த 3 ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பான கேள்வியொன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டுகளில், பாகிஸ்தான் அகதிகள் 1,595 பேருக்கும், ஆப்கானிஸ்தான் அகதிகள் 391 பேருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 295 ஹிந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தனது பதிலில் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மியான்மர் அகதிகள் நாடு கடத்தல்: இதேபோல், ரோஹிங்கயா அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா? என்ற கேள்விக்கு கிரண் ரிஜிஜு அளித்த பதில்:
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள அகதிகளைக் கண்டறிந்து, அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவது நீண்ட கால நடவடிக்கையாகும். ஏனெனில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அந்நாட்டு அரசின் மூலம் உறுதி செய்ய வேண்டும். அதன்படி, மியான்மர் தூதரகத்திடமிருந்து பெறப்பட்ட படிவங்கள், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டு, சட்டவிரோத அகதிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 22 மியான்மர் அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.