புது தில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை பெண் என்று வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி அவையில் இல்லை. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ' நாடாளுமன்றம் வந்து ஒரு நிமிடம் இந்த விவாதத்தில் வந்து கலந்து கொண்டு பேசக் கூட பிரதமருக்கு முடியவில்லை. தன்னைக் காப்பற்றுமாறு ஒரு பெண்ணிடம் கேட்டுக் கொண்டுள்ளார்' என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனை பெண் என்று வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.