வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஆட்சியை காப்பாற்ற ம.ஜ.த., காங்கிரஸ் தீவிரம்

கர்நாடகத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடைசிக்கட்ட முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இதை முறியடித்து ஆட்சியை

Updated On :15 ஜனவரி 2019, 1:22 am IST


கர்நாடகத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடைசிக்கட்ட முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இதை முறியடித்து ஆட்சியை தக்கவைக்க ம.ஜ.த., காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 113 உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸின் 80, ம.ஜ.த.வின் 37, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என தலா ஒரு உறுப்பினர்கள் என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. -காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டுள்ளது. 
பெரும்பான்மை பலத்தைவிட கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் மட்டுமே கூடுதலாக உள்ளனர். எனவே, கூட்டணி அரசை கவிழ்க்க ஆட்சிக்கு வந்தது முதலே தொடர் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்துள்ளது. 
பாஜகவில் 6 எம்எல்ஏக்கள்? இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் சேரவிருப்பதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுதவிர, சில எம்எல்ஏக்கள் பாஜகவின் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுவதால், கூட்டணியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற கர்நாடக பாஜகவின் 104 எம்எல்ஏக்கள், கடந்த சில நாள்களாக புதுதில்லியிலேயே முகாமிட்டுள்ளனர். தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுவதால் பாஜக எம்எல்ஏக்கள் புதுதில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுதில்லியில் பாஜக எம்எல்ஏக்கள் முகாம் ஏன்? இந்தச் சூழ்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மறுத்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியது:-
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. பாஜகவின் நற்பெயரை கெடுப்பதற்காகவே முதல்வர் குமாரசாமி இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகிறார். பாஜக எம்எல்ஏக்கள் அடுத்த சில நாள்கள் புதுதில்லியிலேயே தங்கி மக்களவைத் தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபடுவார்கள். பணத்தாசை காட்டி பாஜக எம்எல்ஏக்களை இழுக்க முதல்வர் குமாரசாமி தான் முயற்சித்து வருகிறார் என்றார் அவர். 
இதே கருத்தை மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடாவும் தெரிவித்தார்.
ம.ஜ.த., காங்கிரஸின் வியூகம்: பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க ம.ஜ.த.வும், காங்கிரஸும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் தனது தொடர்பில் இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,ஆட்சிக்கு எந்த ஆபத்துமில்லை. காங்கிரஸ், ம.ஜ.த. எம்எல்ஏக்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். மும்பையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். ஜனவரி 17-ஆம் தேதி கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றார் அவர்.
இந்த கருத்தை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.