2016-இல் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஜேஎன்யு மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் தில்லி போலீஸார் 1200 பக்க குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக இடதுசாரி மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, கண்ணையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் மீது கடந்த 2016-இல் தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி போலீஸார் 1200 பக்க குற்றப்பத்திரிகையை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையை, தில்லி பட்டியாலா நீதிமன்றம் நாளை பரிசீலனை செய்யவுள்ளது.
குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனீர்பன் பாட்டாச்சார்யா, அக்விப் ஹூசைன், முனீப் ஹூசைன், உமர் குல், ராயீ ரசூல், பஷீர் பாட், ஷேஹ்லா ரஷீத் மற்றும் சிபிஐ தலைவர் டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜா ஆகியோரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124ஏ 323, 465, 471, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர் கண்ணையா குமார் கூறுகையில்,
"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த செய்தி உண்மையானால் போலீஸாருக்கும், மோடிக்கும் நன்றி. 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், இது அரசியல் உந்துதல் என்பது தெளிவாக வெளிப்படுகிறது. இந்தியாவின் நீதித்துறையை நான் நம்புகிறேன்.