புதுதில்லி: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள ரூ.16.40 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜாகிர் நாயக்கின் முஸ்லிம் ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பலரை தூண்டியதாகவும், மதங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக் கூட்டங்களில் பேசியதாகவும் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.
ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் ரூ.16.40 கோடி மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் அசையா சொத்துக்களை முடக்க தற்காலிகமாக அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.