/

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் வளரும்: கமல்நாத்

ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதை உலகுக்கு இந்தியா வெளிப்படுத்தியிருப்பதாக மத்தியப் பிரதேச

News image
Updated On :24 ஜனவரி 2019, 3:01 am IST


ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதை உலகுக்கு இந்தியா வெளிப்படுத்தியிருப்பதாக மத்தியப் பிரதேச முதல்வரும், முன்னாள் மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இல்லாமல், மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், புதன்கிழமை நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கமல்நாத் உரையாற்றியதாவது:
ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும், அவற்றின் திட்டங்களைச் சார்ந்து இல்லாமல், நாட்டின் திறமைமிக்க இளைஞர்களைக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இருந்தபோதிலும், தற்போது வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் ஆகியவை நாட்டின் பெரும் சிக்கல்களாக உருவெடுத்துள்ளன. பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் தெளிவான திட்டங்களைத் தீட்டுவது அவசியமாகும்.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயமே உள்ளது. ஆனால், விவசாயிகள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். முக்கியமாக மத்தியப் பிரதேச விவசாயிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேளாண் கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்தாததால், வங்கிகளின் வாராக் கடன்களும் அதிகரித்தன. 
இவற்றைக் கருத்தில்கொண்டே, மாநிலத்தில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். இதனால், மாநில அரசுக்கு சுமார் ரூ.56,000 கோடி செலவானது. இருந்தபோதிலும், விவசாயிகளும் வங்கிகளும் இதனால் மிகுந்த பயனடைந்தனர்.
புதிய திட்டங்கள் அவசியம்: உலகம் பல்வேறு விதத்தில் மாறியுள்ளது. ஆனால், சிலர் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கின்றனர். தான் செய்வது அனைத்தும் சரியென்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகம் மாறிவிட்டது என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் கணக்கிடுவது பொருத்தமாக இருக்காது. மக்களின் நலனை அடிப்படையாக வைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட வேண்டும்.
நாட்டு மக்களின் பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வு, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போக்குவதற்குப் புதிய முறையிலான திட்டங்கள் அவசியமாகும். 
புதிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை எனில், இந்த ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது, இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் வணிக ஒப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் வணிக விதிமுறைகளின்படியே இந்தியா மற்ற நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது என்று கமல்நாத் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.