தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார் குழந்தைகளுக்கான எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான உமாநாத் விழியன்.
தேசியக் கல்விக் கொள்கை குறித்து கேள்வி - பதில் வடிவிலான ஒரு விளக்கம் இதோ..
பதின்பருவம் முழுக்க தேர்வுகள் தான்!
கேள்வி : பள்ளியில் படிக்கும் பதின்பருவ குழந்தைகள் எத்தனை பொதுத்தேர்வுகளை சந்திப்பார்கள்?
பதில் : பதிமூன்று - பதினெட்டு வயது குழந்தைகள் , அதாவது எட்டாவது முதல் பன்னிரெண்டாவது வரையில் படிக்கும் குழந்தைகள் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு பின்னர் எழுதப்போகும் தேர்வுகள் ஒன்பது. மொத்தம் 50+ பாடங்கள். எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு அதற்கு பின்னர் செமஸ்டருக்கு குறைந்தது ஐந்து பாடங்களில் தேர்வு. இந்த பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று மற்றொரு குழப்பமும் உள்ளது. மேலும் ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம்.
எது சிறந்த மதிப்பெண்ணோ அது எடுத்துக்கொள்ளப்படும். (ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போலவே).
இது மற்றொரு குழப்பலான விஷயம் போர்ட் ஆப் எக்ஸாமினேஷன். மற்ற நாடுகளில் இது பின்பற்றப்படுகின்றது என்று வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இங்கிலாந்து தான். 1990களின் ஆரம்பத்தில் இந்த Multiple Board of Examination முறை அங்கு வந்தது. அங்கும் இதனை மாற்றி அமைக்க வேண்டும், மிகவும் குழப்பமான சிக்கலான முறை என்ற வலுவான எதிர்ப்பு இருக்கும் போது இன்னும் கல்வியில் நிறைய அடையவேண்டிய நம் நாட்டில் இந்த முயற்சி மேலும் குழப்பத்தையும் பின்னடைவையும் சந்திக்க வைக்கும்.
இந்த Procedural Difficulties ஆல் தான் பல இடைநிற்றல்கள் நடைபெறுகின்றன. தேர்வுகளையும் தேர்ச்சிகளையும் எவ்வளவு எளிமையாக வைத்திருக்க முடியுமோ அப்போதே அதற்கு முன்னர் நிகழும் கற்றல் இனிமையாக வலுவானதாக அழுத்தமானதாக இருக்க முடியும்.
மேலும் இங்கே கவலை இந்த பதின் பருவத்தினரைப் பற்றி. ஒரு வாழ்வின் மிக முக்கியமான பகுதி, உடல் அளவிலும் மன அளவிலும் குழப்பங்களை சந்திக்கும் பருவம், அவர்களின் நேரமும் கவனமும் முழுக்க இந்த தேர்வுகளிலேயே சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.