புது தில்லி: ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேர் பேரவைத் தலைவர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி 10 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதம் கொடுத்த 10 எம்எல்ஏக்களும் அவைத் தலைவர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்களுக்கும், எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று அவைத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெங்களூரு வரும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கர்நாடக டிஜிபிக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று நேரில் ஆஜராவார்களா? அப்படியே ஆஜராகி விளக்கம் அளித்தால், அவர்களது விளக்கத்தை ஏற்று அவைத் தலைவர் ராஜினாமாவை ஏற்பரா? அல்லது நிராகரிப்பாரா? அப்படியே அவர் நிராகரித்தால், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுமா என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன் இன்றைய விசாரணை முடிவுக்கு வநதுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக கர்நாடகப் பேரவைத் தலைவரிடம் நாங்கள் கடிதம் அளித்துவிட்டோம். ஆனால், அவர் வேண்டுமென்றே அதனை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இன்று மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களைச் சந்திக்க சென்ற கர்நாடக மாநில அமைச்சர் டி.கே. சிவகுமாரை மும்பை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர். அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மிலிந்த் தேவ்ரா, நசீம் கான் ஆகியோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.