குஜராத் கலவரம்: பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரிக்கு சரியான தண்டனை

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
குஜராத் கலவரம்: பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரிக்கு சரியான தண்டனை
Published on
Updated on
1 min read


மும்பை: குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ். பகோராவை ஓய்வு பெற ஒரு நாள் இருந்த நிலையில் மே மாதம் 30ம் தேதி பணியில் இருந்து நீக்கி மத்திய உள்நாட்டு விவகாரத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது கிடைக்கும் எந்த பலனையும் அவர் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 குழந்தைகள் கலவரத்தில் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முதலில் ஆமதாபாதில் நடைபெற்றது. பின்னர் பானுவின் ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்டு, மும்பைக்கு விசாரணை மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வழக்கு மீது விசாரணை நடத்தி, போலீஸார் உள்பட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார், 2 மருத்துவர்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. 6 பேரின் மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க குஜராத் அரசு முன்வந்தது. இதை நிராகரித்து விட்ட பானு, உச்சநீதிமன்றத்தில் தனக்கு அதிகப்பட்சமாக ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பில்கிஸ் பானு வசிக்க வீடு இன்றி மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருவது நீதிபதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் அளிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com